சென்னை, புறநகர் பகுதிகளில் பஸ்கள் குறைவு; அவதிப்படும் பயணிகள்
0புறநகர் பகுதிகளில் போதுமான பஸ்கள் இல்லாததால் நெருக்கடியில் சிக்கி பயணிகள் தவிக்கின்றனர். கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.சென்னை புறநகரில் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், ஆவடி, திருமுல்லைவாயல், கோவில்பதாகை, முத்தாபுதுப்பேட்டை, பட்டாபிராம், திருநின்றவூர், திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளும், அயப்பாக்கம், வானகரம், வெள்ளானூர், பொத்தூர், மோரை, சோராஞ்சேரி, கருணாகரச்சேரி, அன்னம்பேடு, நெமிலிச்சேரி, நடுக்குத்தகை, பாண்டேஸ்வரம், பாலவேடு, கர்லபாக்கம், அரக்கம்பாக்கம், பாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளும் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் வசிக்கும் மாணவ, மாணவியர் சென்னைக்கும் புறநகர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். பலர் சென்னை, புறநகர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர்.
இவர்களில் பெரும்பாலானோர் மாநகர பஸ்களிலேயே வேலைக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று வருகின்றனர். அம்பத்தூர், ஆவடியில் உள்ள மாநகர போக்குவரத்து பணிமனையில் இருந்து சுமார் 250 பஸ்கள் இயக்கப்படுகிறது. இவை போதுமானதாக இல்லை. இதனால் காலை, மாலை அலுவலக நேரங்களில் அம்பத்தூர், ஆவடி செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அளவுக்கு அதிகமாக உள்ளது. சொகுசு, எக்ஸ்பிரஸ், தொடர் வண்டி, சாதாரண பஸ்கள் என எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைத்து பஸ்களிலும் கூட்டம் உள்ளது.
நெருக்கடியில் சிக்கி அவதிப்படுவதற்கு பயந்து பலரும் ஷேர் ஆட்டோக்களில் செல்கின்றனர். அப்படி இருந்தும் பஸ்களில் கூட்டம் குறைந்த பாடில்லை. பஸ்களில் இடமில்லாததால் மாணவர்களும், இளைஞர்களும் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். கீழே விழுந்து காயம் ஏற்படும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. பஸ்கள் முந்தி செல்லும்போது படிக்கட்டில் தொங்குவோர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.
கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு மாநகர பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source: tamilmurasu